நீர்ப்பங்கு முறைகேடு தொடர்பில் விளக்கமளிக்குமாறு மாவட்ட பிரதி ஆணையாளர் அறிவுறுத்தல்
கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழான 2023ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான ஒன்பது ஏக்கர் தண்ணீர்ப் பங்கு தொடர்பில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் உரிய விளக்கத்தினை வழங்குமாறு மாவட்ட பிரதி ஆணையாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - இரணைமடுக்குளத்தின் கீழான 2023ஆம் ஆண்டுக்கான சிறு போக செய்கையின் போது பல்வேறுபட்ட முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை மற்றும் சீரான நீர் விநியோகமின்மை என பல்வேறுபட்ட முறைபாடுகள் தொடர்ந்தும் விவசாயிகளால் முன்வைக்கபட்டு வருகின்றன.
நீர்ப்பாசனக் காணிகள்
புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பகுதியில் போதியளவு நீர்ப்பாசனக் காணிகள் உள்ளதால் புலிங்கதேவன் முறிப்பு நீர்வரிப் பங்குகள் வேறு எந்த அமைப்புக்களுக்கும் கொண்டு செல்ல முடியாது என்றும் வேறுபகுதிப் பங்குகள் உள் கொண்டு வரமுடியாது என்றும் தீர்மனிக்கப்பட்டு அதன்படியே பயிர்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆனாலும் கிளிநொச்சி - கண்டாவளை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட புலிங்கதேவன் முறிப்பு கமக்கார அமைப்பின் கீழுள்ள விவசாயி ஒருவருக்கு சொந்தமான 1972ஆம் ஆண்டுமுதல் பயிர் செய்து வந்த அவருக்குரிய 4712 நீர் வரி இலக்கம் கொண்ட ஒன்பது ஏக்கர் நீர் பங்கினை கமநல சேவை நிலையத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே நிறுத்தியதாக தெரிவித்து விட்டு குறித்த நீர்ப்பங்கு அமைப்பினால் மோசடி செய்யப்பட்டு ஏக்கர் ஒன்று தலா 37,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி பங்கு மோசடி பாதிக்கப்ட்ட விவசாயினால் கண்டறியப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் கமநல சேவை நிலையம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள்
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன் பிரகாரம் இது தொடர்பான விளக்கத்தினை கமக்கார அமைப்பிடம் கோரியுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அவர்களால் தெரிவிக்கபட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட பயிர் செய்கை குழுவின் தலைவராக பதவி வகிக்கும் மாவட்ட அரச அதிபர் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் சம்பந்தப்பட்ட கமக்கார அமைப்புகள் ஆகியவற்றுக்கு கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
