நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா? இயக்குனர் வ.கௌதமன் கேள்வி
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலீடாக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனை பார்க்கும் பொழுது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா என சந்தேகம் எழுகிறது என தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனரும், தென்னிந்திய பிரபல இயக்குனருமான வ.கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் இலங்கையின் அதிபர் அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆயுதங்கள் எவையும் இன்றி நடை பயிற்சியில் ஈடுபடுகின்றார்.
கொடுத்த வாக்குறுதியை மீறிய அநுர
ஒரு ஜனாதிபதி அச்சமின்றி, நிம்மதியாக தமிழர் தாயகத்தில் நடை பயிற்சியில் ஈடுபடும்போது அங்கு பயங்கரவாதம் இல்லை என்ற கருத்து மிகச் சாதாரணமாகவே வலுப்பெறுகிறது. சம காலத்தில் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பெரும்பாலும் தமிழர்களே பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்தச் சட்டத்தினால் ஜே.வி.பியை சேர்ந்த இளைஞர்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும், அநுரகுமார எதிர்க்கட்சியில் இருந்தபோது பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். அவரது தேர்தல் பிரகடனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டமானது நீக்கப்படும் என்ற விடயத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் பதவியேற்று கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் கடக்கின்றன. ஆனால் அந்தப் பயங்கரவாத தடைச் சட்டமானது இதுவரை நீக்கப்படவில்லை.
அதற்குப் பதிலீடாக அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற ஒன்றை கொண்டு வருவதற்கு அநுர அரசு முயற்சிக்கிற செய்தியறிந்து நான் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பேரதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டமானது ஏற்கனவே உள்ள சட்டத்தை விட மிக மோசமான ஒரு குரூர சட்டமாக காணப்படுகின்றது. ஒரு வேளை ஏற்கனவே உள்ள சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்காக அநுர அரசு போடும் நாடகமா இது என எமக்கு சந்தேகம் ஏற்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே உள்ள சட்டத்தை விட மோசமான ஒரு சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும்போது, புதிய சட்டத்தை விட ஏற்கனவே உள்ள சட்டமே பரவாயில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். அதனைத்தான் அரசு விரும்புகின்றதா என்கிற பெருத்த சந்தேகத்தை உண்டுபண்ணுகிறது.
வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் தாயகத்தில் தேசிய கட்சி ஒன்றில் இருந்து அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்துள்ளனர். அந்த விடயத்தையாவது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஏன் புரிந்து கொள்ளவில்லை. உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்கின்ற நன்றி கடன் இதுதானா?
ராஜபக்சர்களே இருந்திருக்கலாம்..
அநுரவும் ராஜபக்சகளின் கொடுங்கோல் வழியிலேயே என்றால் ஜனாதிபதியாக அநுர எதற்கு? ராஜபக்சகளே நாட்டினை தொடர்ந்து ஆண்டு இருக்கலாமே. நல்லிணக்கம், சமாதானம், சமத்துவம் என்று வாயால் மட்டும் கூறினால் சரியாகாது.
அதனை ஆட்சியில், நடைமுறையில் அரசியல் அறத்தோடு செய்து காட்ட வேண்டும். புத்தபெருமான் அருளிய போதனைகள் அத்தனையும் நடைமுறை வாழ்க்கைக்கு உகந்ததாக காணப்படுகின்றன.

ஆனால் அந்த புத்தபெருமானை வைத்து தமிழர் தாயகங்களில் காணிகளை ஆக்கிரமித்தல், தமிழ் மக்களுக்கு தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் அன்றாடம் அரங்கேற்றப்படுகின்றன.
அறத்தை போதித்த புத்தரின் பற்களில் இரத்தக்கறை படிந்துள்ளது. இது சிங்கள பேரினவாதிகளுக்கு மாத்திரமன்றி புத்தருக்கும் ஏற்பட்ட ஒரு இழுக்கு. புத்தருக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்களின் வரிசையின் இறுதியில் ராஜபக்சகளே இருப்பார்கள் என நாங்கள் நம்பினோம். ஆனால் அந்த வரிசை அநுரவின் ஆட்சியிலும் நீள்கிறது என்பது மனவருத்தமளிக்கிறது.
அனுர அவர்களே!புத்தரின் பற்களில் உள்ள கறையை போக்குவதற்கு உடனடியாக அதற்கு வெள்ளை அடியுங்கள். புத்தரின் புனிதத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை போக்குங்கள். அனைவரும் சமம் என்ற விடயத்தை ஆட்சியினூடாக நிரூபியுங்கள். இனவாதத்தை தூண்டும் காவியுடை தரித்தோரை எந்தவிதமான பாகுபாடும் இன்றி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.
மக்களை ஒடுக்குகின்ற தேவையற்ற சட்டங்களை நீக்குங்கள். அதற்கு பதிலீடாக எந்தவொரு புதிய சட்டத்தையும் கொண்டுவர முயற்சிக்காதீர்கள். இவை எல்லாம் நடந்தால் நீங்கள் உண்மையான, மக்கள் நலன் மிக்க ஒரு ஜனாதிபதி என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். இல்லையாயின் நீங்களும் பத்தோடு ஒன்று பதினொன்று தான் என்றார்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam