தமிழர்களை கொல்ல இடமளித்த ஜே.ஆர்.! கொடூர சம்பவத்தை நினைவுப்படுத்தும் தேரர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு தமிழர்களை கொல்ல, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இடமளித்ததாக தேவாலஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 13 இராணுவ வீரர்களை கொலை செய்தார்கள். ஆனால் இராணுவ வீரர்களை கொலை செய்த அந்த இயக்கத்தினரை மாத்திரம் தேடிச் சென்று அழிப்பதை விட்டு அன்று அனைத்து பொலிஸாருக்கும் விடுமுறை கொடுத்து வேலை செய்ய விடாமல் ஜே.ஆர்.ஜெயவர்தன தடுத்தார்.
பின்னர் அனைத்து தமிழர்களின் வீடுகளையும், கடைகளையும் உடைத்து அவர்களின் பொருட்களை திருடி, அவர்களுடைய அனைத்து சொத்துக்களுக்கும் தீ வைத்து கொளுத்தி, தமிழர்களை கொல்ல இடமளித்தார். இது மிகவும் வேதனையான கொடூரமான சம்பவம்.
மனித இனத்தில் இடம்பெற கூடாத ஒரு கொடூரமான சம்பவம் தான் அன்று அவ்வாறு நடந்தது. நமது சிங்கள சமூகத்தில் வாழும், அரசியல் நோக்கங்களுக்காக செயற்படும் சில கொடுமைக்காரர்கள், முக்கியமாக யாழ். நூலக எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருந்த காமினி லொக்குகே உள்ளிட்ட இன்று அரசாங்கத்தில் இருக்கும் பலர் அன்று தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற பல கொடூர சம்பவங்களுக்கு தலைமை வகித்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் அவர்கள் யாருக்கும் தண்டனை வழங்கவில்லை. இதன் காரணமாகவே அன்று நிறைய தமிழ் மக்கள் இந்த நாட்டில் இந்த சிங்கள சமூகத்தோடு வாழ முடியாது என்ற அச்சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆசீர்வாதத்தில் அன்று பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றார்கள்.
ஆகவே இது போன்ற இனக்கலவரங்களை இனியும் ஆரம்பிக்காது மக்கள் அனைவரும் அனைத்து இன, மதங்களையும் மதித்து, இன்று நாட்டில் காணப்படும் பிரதான பிரச்சினைகளை மறைப்பதற்காக உருவாக்கப்படும் ஏனைய பிரச்சினைகளுக்குள் சிக்கிவிடாமல் சிந்தித்து செயற்படுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.