வாய்ச் சவடால் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வை எடுத்துரையுங்கள்: சித்தார்த்தன் ஆதங்கம்
இனப்பிரச்சினைக்கான ஒரு நியாயமான தீர்வை வெறும் வாய்ச் சவடால் இல்லாமல் உலகிற்கு இலங்கை எடுத்துரைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரால் கொண்டுரப்பட்ட பாலஸ்தீனத்தின் விடுதலை தீர்மானம் தொடர்பில் நேற்று(18.07.2023) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”இந்த சபையின் இரு பக்கங்களிலும் இருக்கக்கூடியவர்கள் வேறு எந்த ஒரு விடயத்திலும் ஒன்றாக கருத்துச் சொல்ல முடியாதவர்கள், சொல்லாதவர்கள் அனைவருமே இந்த விடயத்திலே மிகத் தெளிவாக இந்த பிரேரணையை ஆதரிக்கின்றார்கள்.
எங்களை, தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் பாலஸ்தீன மக்களுக்கு நாங்கள் மிக மிக நீண்ட காலமாக ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்திருக்கின்றோம்.
எங்களுடைய கட்சிகளாக இருக்கலாம் இயக்கங்களாக இருக்கலாம் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்திருக்கின்றோம்.
பாலஸ்தீன இலங்கை நட்புறவு
என்னைப் பொறுத்தமட்டில் இங்கு சபையிலே முன்னால் இருக்கக்கூடிய டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தமட்டில் நாங்கள் நேரடியாக பாலஸ்தீன இயக்கங்களின் தோழர்களுடன் அந்த மக்களுடன் வாழ்ந்தவர்கள், இருந்தவர்கள், அங்கேயெல்லாம் போய் பழகியவர்கள்.
அவர்களுடைய உணர்வுகளை நன்றாக உணர்ந்தவர்கள். அறிந்தவர்கள். எவ்வளவு தூரம் தங்களுடைய ஒரு தனிநாட்டை அடைய வேண்டும் என்பதிலே அவர்களுக்கு இருக்கின்ற அந்த ஆர்வம் அக்கறை உணர்வு இவைகளை நேரடியாக பார்த்தவர்கள்.
ஆகவே, இந்த இரண்டு பக்கங்களிலும் சபையில் இருக்கக்கூடிய அங்கத்தவர்கள் ஒற்றுமையாக முழு மனதாக இந்த பிரேரணையை ஆதரித்துப் பேசுவது என்பது ஒரு மிகப்பெரிய காரியாகமாகவே நான் பார்க்கின்றேன்.
எங்களுடைய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முதன்முதலாக பாலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்தை உருவாக்கினார்.
பாலஸ்தீனருடன் மிக நெருங்கிய நட்பாக இருந்தவர்கள். அவர் அப்படி இருக்கின்ற போதெல்லாம் எங்களுக்கு ஒரு மனதுக்கு திருப்தியாக இருக்கும்.
தமிழ் மக்களுடைய பிரச்சினை
ஏனென்றால் ஏறக்குறைய ஐயாயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கக்கூடிய மக்களுக்காக இவ்வளவு உணர்வாக கதைக்கின்றவர்கள் நிச்சயமாக இந்த நாட்டுக்குள்ளே இருக்கக்கூடிய தமிழ் தேசியப் பிரச்சினைக்கு ஒரு ஜனநாயமான தீர்வை நோக்கியாவது கதைப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். அது நடக்கவில்லை.
அவர் மாத்திரமல்ல இந்த சபையிலே நாங்கள் பார்க்கின்றோம். பாலஸ்தீனர்களுக்காக கதைக்கின்றார்கள். நல்லது. வரவேற்கின்றோம். அது கதைக்கப்பட வேண்டிய விடயம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.
ஆனால் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்பதிலே அவர்களுக்கு அக்கறையில்லை. ஏன் நான் இதைக் கூறுகின்றேன் என்றால், நீங்கள் உங்கள் நாட்டிலே இருக்கக்கூடிய இன்னொரு இனத்தை அதாவது தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக ஒடுக்குவது மாத்திரமல்ல, அவர்களுடைய சகல உரிமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக பறித்து இரண்டாந்தர பிரஜைகள் ஆக்கிக் கொண்டு நீங்கள் இன்னொரு நாட்டிற்கு அந்த நாட்டில் உரிமையைக் கொடு என்று சொன்னால் அதாவது அந்த நாட்டுக்கு ஒரு தனிநாட்டைக் கொடு என்று சொன்னால் உலகத்திலே எவரும் அதைக் கேட்க மாட்டார்கள்.
ஏனென்றால் நீங்கள் ஒரு விசுவாசமாக அதைச் சொல்லவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆகவே அதை விசுவாசமாக சொல்ல வேண்டும். சொல்வதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு பல விடயங்கள் உள்ளன.
விரட்டியடிக்கப்பட்ட மக்கள்
ஜூலை மாதம் 3ம் திகதி பாலஸ்தீன ஜெனின் முகாமிலே இடம்பெற்ற அழிவைப்பற்றிச் கதைக்கின்றோம். ஜூலை மாதம் 3ம் திகதி பத்துப்பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். 30 வீதத்திற்கும் மேல் குழந்தைகள் தாய்மாரும் மரணித்துள்ளனர்.
அதைவிட பொருட்சேதங்களும், இப்படியாக எல்லாம் அங்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது. ஏறக்குறை 48 இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்பும் 68 இஸ்ரேலிய அரபு யுத்தத்திற்குப் பிறகும் பாலஸ்தீனர்களுடைய தாயகபூமிகள் முழுக்க காசா ஸ்ரீட், வெஸ்ட்பாங், எரிசலம் ஈஸ்ட் இப்படியாக இடங்கள் எல்லாம் பாலஸ்தீன மக்கள் விரட்டியடிக்கப்பட்டு அந்தப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன.
பாலஸ்தீனர் எவரைக் கேட்டாலும் அவர்கள் இந்த இடத்தைச் சொல்லி சொல்லமாட்டார்கள்.
இஸ்ரேல் என்றும் கதைக்க மாட்டார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் என்று சொல்வார்கள். அப்டியான ஒரு நிலைப்பாடு எங்களுடைய பகுதிகளிலும் நடக்கின்றது.
யுத்தத்திற்குப் பிறகு பல மக்கள் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்கள். சரித்திர ரீதியாக பார்க்கின்றபோது உலகத்திலேயே தாயக பூமியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அகதிகள் அவர்கள் அரபு நாடுகளிலும் மற்றைய இடங்களிலும் வாழுகிறார்கள்.
ஆகக்கூடிய அகதிகள் பாலஸ்தீனியர்கள். அதேபோல தமிழர்களும் மிகப்பெரிய தொகையான ஏறக்குறைய 15லட்சம் மக்களுக்கும் மேல் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
வெளிநாடுகளிலே சீவிக்கிறார்கள். அது இந்தியாவாக இருக்கலாம் ஐரோப்பாவாக இருக்கலாம், கனடாவாக இருக்கலாம் சீவிக்கின்றார்கள். ஆகவே, இந்த பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கும் எங்களுக்கும் இடையிலே ஒரு மிக நெருங்கிய ஒற்றுமைகள் இருக்கின்றது.
பாலஸ்தீன விடுதலை
அதுதான் காரணமோ தெரியாது எங்களுடைய இயக்கங்களை சார்ந்த தோழர்கள், இளைஞர்கள் என பலர் எண்பதுகளிலேயே அங்கு சென்று வாழ்ந்திருக்கிறார்கள். அங்கு இருந்திருக்கின்றார்கள். அதை எந்த இயக்கம் என்று அல்ல. பீ.எல்.ஓ செயார்மன் அரபாத்தினுடையதோ அல்லது பீ.எவ்.எல்.ரி யோ இப்படியாக பல வழிகளிலே நாங்களும் அவர்களும் மிக ஒற்றுமையாகவே இருக்கின்றோம்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் சிறப்பு ஒன்று இருக்கின்றது. என்னவென்றால், இலங்கையிலே யுத்தம் ஆக உச்சத்திலே நடந்து கொண்டிருந்த போதும்கூட தென்னிலங்கை அரசுக்கும் வடகிழக்கிலே இருக்கக்கூடிய மக்களுக்குமிடையிலே யுத்தம் நடந்து கொண்டிருந்த போதுகூட இரண்டு பக்கமுமே ஒற்றுமையாக பாலஸ்தீனர்களுடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டுதான் இருந்தோம்.
நான் கொழும்பிலே காலஞ்சென்ற அஸ்ரப் அவர்கள் நடாத்திய ஒரு கூட்டத்திலே பங்குபற்றியிருந்தேன். அதிலே பல பாலஸ்தீனியர்கள் அரபு நாட்டவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள்.
அப்போது அநுர பண்டாரநாயக்கவும் அங்கு இருந்தார். அப்போது நான் சொன்னேன். ஏதிர்க்கட்சித் தலைவர் அநுர பண்டாரநாயக்க இருக்கிறார், நானும் இருக்கிறேன். நாங்கள் ஒற்றுமையாக உங்களை ஆதரிக்கின்றோம். ஆனால் எங்களுக்குள்ளே வேற்றுமை இருக்கின்றது.
எங்களுக்குள்ளே யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது. இருந்தாலும் நாங்கள் உங்களை ஆதரிப்பதிலே ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று.
அந்த ஒற்றுமையை மனதிற் கொண்டு இந்த நாட்டிலே இருக்கக்கூடிய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணுவதன் மூலம்தான் இலங்கை எடுக்கக்கூடிய சரியான நடவடிக்கைகளும் நிச்சயமாக சர்வதேச ரீதியாக எற்றுக் கொள்ளப்படும், நிமிர்ந்து பார்க்கப்படும்.
இலங்கை வெறும் வாய்ச் சவடால் இல்லாமல் அதை சொல்லவேண்டும். சொல்லுவதற்கு நியாயமாக அவர்களுக்கு ஒரு தார்மீக உரிமை இருக்க வேண்டும். தார்மீக உரிமையுடன் அதைச் சொன்னால்தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
நியாயமான தீர்வு
நான் சொல்லவில்லை. ஏதோ இவர்கள் இதை விரும்பவில்லை, அவர்கள் பாசாங்கு பண்ணுகிறார்கள் என்று அப்படி அல்ல. அவர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்காக பேச விருப்பம் இருந்தாலும் கூட அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணாமல் இருக்கும் வரையும் பாலஸ்தீனர்கள் அல்ல. வேறு எந்த ஒரு வெளிநாட்டு விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க ஆரம்பித்தால் அதை ஒருவருமே சரியான முறையிலே பார்க்க மாட்டார்கள்.
ஆகவே முதலில் எங்களுடைய பிரச்சினைக்கும் ஒரு நியாயமான தீர்வு காண்போம். அதேநேரத்தில பாலஸ்தீனர்களுடைய விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்.
அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிலே ஆதரிக்கலாம். சில வேளைகளில் அரசாங்கங்களுக்கு பிரச்சினை வரலாம்.
இஸ்ரேல் நாடு இங்கு வந்து உதவியிருக்கிறது. யுத்த காலத்திலே எங்களுக்கு பெரியளவிலே உதவினார்கள். ஆகவே நாங்கள் என்ன செய்வது.
பாலஸ்தீனிய இயக்கங்கள் கூடுதலாக இந்த தமிழ் இயக்கங்களுடன் தானே இருந்தார்கள். இப்படியான சிந்தனைககள் அவர்களுக்கு இருக்கலாம்.
ஏனென்றால் சிலர் இவ்வாறு சொல்லி கேட்டிருக்கின்றேன். அதை எல்லாம் மறந்து ஒரு நியாயமான தீர்வைக் கண்டு, தொடர்ந்தும் பாலஸ்தீன விடுதலைக்காக உழைப்போம்.” என தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
