தம்மிக்க பெரேரா பதவி விலகவுள்ளதாக தகவல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பெரேராவின் பெயரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழு ஜூன் 10 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிட்டது.
பெரேராவின் பெயர் முன்னதாக ஜூன் 10 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
அமைச்சு பதவியில் இருந்து விலகிய தம்மிக்க பெரேரா
தம்மிக்க பெரேரா பங்குகளை வைத்திருந்த பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் இருந்தும் இராஜினாமா செய்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவம் பெற்றார்.
தம்மிக்க பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களும் உச்ச நீதிமன்றத்தால் ஜூன் 21ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.
அவர் ஜூன் 22ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பின்னர் அவர் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், ஜூலை 10ம் திகதி அவர் பதவி விலகியிருந்தார்.




