பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை.. தமிழரசுக்கட்சி வெளியிட்ட தகவல்
கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர செயற்பட்டு இருந்த போது மனித உரிமை மீறல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் அவருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் கேள்விக்கு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், "பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை தீர்மானத்தை எதிர்கட்சியினர் கொண்டுவர இருக்கின்றனர்.
உரிய ஆதாரம்
இது தொடர்பாக தமிழரசு கட்சியை பொறுத்தமட்டில் எவ்வாறு நடந்து கொள்வது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. இது விடயம் தொடர்பாக தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக கூடி கலந்து ஆலோசிக்க வேண்டி உள்ளது.
உண்மையில் அருண ஜெயசேகர கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக இருக்கும் போது அவர் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் என்ற விஷயம் ஆராயப்பட வேண்டும்.
அவர் அக்காலத்தில் தமிழ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய விடையத்தில் செயல்பட்டு இருந்தால் அதற்கு உரிய ஆதாரங்கள் இருக்குமாக இருந்தால் அதை எதிர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். தேசிய மக்கள் சக்தியானது தங்கள் பக்கம் இருக்கின்றவர்கள் ஊழல் மோசடி இலஞ்சம் இல்லாத சுத்தமானவர்கள் தூய்மையானவர்கள் என கூறி வருகின்றனர்.
அது உண்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனவே அவர்களுடைய கருத்துக்களையும் எதிர்க்கட்சி கூறுகின்ற கருத்துக்களையும் ஆராய வேண்டியுள்ளது.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
அவர் உண்மையில் தமிழ் மக்களை பாதிக்க கூடிய விதத்தில் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சட்டவிரோதமான செயற்பாட்டில் உடன்பட்டிருந்தால் எமது கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்போம்.
அதேவேளை அவ்வாறு சம்பந்தப்படவில்லை என்கிற விஷயம் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பாக எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆதரிப்பதா? எதிர்ப்பதா? புறக்கணிப்பதா? என தீர்மானத்தை எடுப்போம். அதேவேளை ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் வாதங்களின் கருத்துக்களை பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த காலத்தில் இருந்த இராணுவ தளபதிகள் மனித உரிமைகளை மீறியுள்ளனர். புதைகுழி விஷயத்தில் கூட அப்போது இருந்தவர்கள் மனித உரிமைகளை மீறி அப்பாவி மக்களை புதைகுழிக்குள் புதைத்துள்ளனர்.
தேசபந்து தென்னக்கோன் பற்றி பல ஆதாரங்கள் கிடைத்தது எனவே அவரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம் ஏன் என்றால் அவர் கடந்த காலத்தில் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு கட்சியின் ஒரு பொலிஸ் மா அதிபராக இருந்துள்ளார். அதனால் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவு வழங்கினோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




