இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் யாழ். மற்றும் மன்னாருக்கு விஜயம் (Photos)
இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு இன்றைய தினம் (26) இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதி நிதிகளை தனித்தனியாக அமெரிக்க துணை தூதர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தரப்புக்கள் தனியாகவும்,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், வாசுகி சுதாகர் ஆகியோர் தனியாகவும் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது சமகால நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க துணைத் தூதர் அரசியல் பிரமுகர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

செய்தி :ஆஷிக்
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை
இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணம்- வலி வடக்கு மயிலிட்டி துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொருளாதார நிலைமை தொடர்பிலும் கேட்டு அறிந்து கொண்டார்.

அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் பிரச்சினை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றமை தொடர்பில், இதன்போது அவர் கடற்றொழிலாளர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார்.
அத்துடன் மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு சென்ற அவர், அங்கு மீள்குடியேற்ற குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பிலும் பொதுமக்களுடன் காணிகள் அதி உயர் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்றது தொடர்பிலும் அவருக்கு வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் அவர் தான் ஜனாதியுடன் பேசி ஒரு நல்லதொரு முடிவினை பெற்று தருவதாக கூறியுள்ளார்.
செய்தி:தீபன் , ராகேஷ்

மன்னார்
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு திங்கட்கிழமை மன்னார் பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், பிரஜைகள் குழு உறுப்பினர்கள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் ஒன்றிய பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலவரம், சமகால நிலைமைகள் தொடர்பாக அமெரிக்க துணைத் தூதர் கேட்டறிந்து கொண்டார்.
இதேவேளை இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று மன்னாரில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது எளுவன்குளம் ஊடாக புத்தளம் மன்னார் பாதை திறப்பதன் அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மன்னாரில் இராணுவத்தினர் மற்றும் கடற்படை ஆக்கிரமித்துள்ள பொதுமக்களின் காணி விடயம் தொடர்பாகவும் சிலாவத்துறை மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாம் முற்று முழுதாக பொது மக்களின் சொந்த காணிகள் என்றும் அவற்றை மக்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் வட மாகாணத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் இணைப்பாளர் குரூஸ்,முசலி பிரதேச சபை உறுப்பினர் தஸ்னீமா, மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் றமீஸா மற்றும் எழுத்தாளர் அஹனாப் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
செய்தி: ஆஷிக்


