தெமட்டகொட சமிந்தவின் சகா ஐஸ் போதைப் பொருளுடன் கைது
கொழும்பின் முக்கிய போதைப் பொருள் வர்த்தகர்களில் ஒருவரான தெமட்டகொட சமிந்தவின் சகாக்களில் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டிய பொலிசார் நேற்று(29.05.2026) குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.
போதைப் பொருள் வர்த்தகம்
தெமட்டகொட சமிந்தவின் அடியாட்களில் ஒருவரான குறித்த நபர், போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் நீண்ட காலமாக பொலிசாரினால் தேடப்பட்டு வந்தவராவார்.
பாதுக்கவைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், நாவலப்பிட்டிய பல்லேகம பகுதியில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நாவலப்பிட்டிய பொலிஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது ஐந்து கிராம் ஐஸ் போதைப்பொருள் அவர் வசமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபரைக் கைது செய்ய முயன்றபோது, அவர் பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கியதில், ஒரு உத்தியோகத்தர் காயமடைந்து நாவலப்பிட்டிய ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டிய பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.