தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்களின் ஆபத்தான செயல்கள்! வெளியான பகிரங்க எச்சரிக்கை
அநுர அரசாங்கம் அராஜகமாக பல உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல உள்ளுராட்சி மன்றங்களில், சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுபவர்களால் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எச்சரிக்கை
பொலிஸார் கடமையில் இருக்கும் போதே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை ஆச்சர்யமளிக்கிறது. ஆனால் இவை ஆபத்தானவை. மக்களுக்கு இது நன்றாக புரிய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய மக்கள் சக்திக்கு, ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் மக்கள் தேவைக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கினர்.
எனினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.
எந்த வழியிலேனும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஜனநாயகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான போராட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
ஜனநாயக உரிமைகள்
அரசாங்கத்தினால் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக அன்று நாம் போராடினோம். அந்த போராட்டத்தில் ஜே.வி.பி. முன்னிலை வகித்தது. ஆனால் இன்று ஜே.வி.பி. அதற்கு முரணாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்காக திட்டமிட்டு நாடகங்களும் அரங்கேற்றப்படுகின்றன. வெலிகம பிரதேசபையில் தேசிய மக்கள் சக்தியின் நாடகம் அரங்கேற்றப்பட்ட போது 400 – 500 பேர் வரையில் சபையை சுற்றி வளைக்கின்றனர்.
ஆனால் காணாமல் போனதாக்க கூறப்படும் உறுப்பினர்கள் தனியாகவே சபைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இது திட்டமிட்ட ஒரு நாடகம் என்பது வெளியிலிருந்து பார்க்கும் எந்தவொரு நபருக்கும் மிகத் தெளிவாகத் தெரியும் என கூறியுள்ளார்.