இலங்கையில் ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு எச்சரிக்கையுடன் உலக சுகாதார அமைப்பு பரிந்துரை
இலங்கையில் தற்போது ஏற்பட்டு வரும் கோவிட் மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால், எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் கோவிட் தொற்றாளர்களில் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழப்பார்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இலங்கை அலுவலகம் விசேட மருத்துவர்களை கொண்டு தயாரித்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நேற்றைய தினம் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையில் இருந்து இலங்கையர்களை பாதுகாப்பதற்காக பல பரிந்துரைகள் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது, மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்கு பதிலாக மாவட்ட பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், சிறிது காலத்திற்கு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துதல், சகல பொது விழாக்களையும் மூன்று வாரங்களுக்கு தடைசெய்தல், மக்கள் ஒன்றுக்கூடுவது தவிர்த்தல், சுகாதார ஊழியர்களை பாதுகாத்தல், பலன் தரும் தொடர்பாடல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு தெளிவுப்படுத்துதல், தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறித்து சரியான தகவல்களை வழங்குதல், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக தடுப்பூசிகளை வழங்குதல் ஆகியன இந்த பரிந்துரைகளில் அடங்கியுள்ளன.
உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையை சேர்ந்த 30 விசேட மருத்துவ நிபுணர்கள் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்.




