இலங்கையில் மீண்டும் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை
மீண்டும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்பட்டமை, விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகளை நிறுத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் உட்பட வழிக்காட்டுதல் தொடர்பான பரிந்துரைகளை வெளியிட்ட சகல விசேட நிபுணர்களும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல்வாதிகளின் தேவைக்கு அமைய செயற்படும் சுகாதார அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு அமையவே, மூன்று மணி நேரத்திற்குள் அறிக்கையை வழங்கக்கூடிய இரண்டு பீ.சி.ஆர் பரிசோதனைக் கூடங்கள் இருக்கும் நிலையில், நாட்டுக்குள் வரும் விமான பயணிகளுக்கு பரிசோதனை நடத்துவது கைவிடப்பட்டுள்ளது.
அத்துடன் அன்பளிப்பாக கிடைத்துள்ள நடமாடும் பீ.சி.ஆர் ஆய்வுக் கூடத்தை பயன்படுத்தி, பரிசோதனைகளை நடத்தி மீண்டும் கோவிட் அலை ஏற்படுவது தொடர்பில் முன் கூட்டியே தீர்மானங்களை எடுக்க முடியும் என்ற சூழ்நிலையில், அது குறித்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
சுகாதார அமைச்சின் தலைக்கணமான செயற்பாடுகளே இதற்கு காரணம்.
தொற்று நோய் மீண்டும் தலைத்தூக்க சந்தர்ப்பத்தை வழங்காது, நோயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.