நளினி மற்றும் முருகன் ஆகியோர் காணொளி அழைப்புகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதிகளான நளினி ஸ்ரீஹரன் மற்றும் அவரது கணவர் முருகன் ஆகியோரை இலங்கை மற்றும் லண்டனுக்கு காணொளி அழைப்புகளை மேற்கொள்ள சென்னை மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
இலங்கை மற்றும் லண்டனில் வசிக்கும் உறவினர்களிடம் நளினியும், முருகனும் பேச அனுமதிக்க அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
தனது மகள் மற்றும் அவரது கணவர் ஸ்ரீஹரன் அல்லது முருகன் ஆகியோருக்கு இலங்கையில் உள்ள தனது மாமியார் மற்றும் லண்டனில் உள்ள மைத்துனருக்கு தினமும் குறைந்தது 10 நிமிடங்கள் காணொளி அழைப்புகள் மேற்கொள்ள பத்மா அனுமதி கோரியிருந்தார்.
முருகனின் தந்தை கடந்த ஏப்ரல் 27 அன்று இறந்துவிட்டார். எனினும் காணொளி அழைப்பு மூலம் இறுதி சடங்குகளில் சேர்ந்துக்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு விசாரணையை , இந்த அனுமதி, பாதிக்கும் என்று மத்திய அரசாங்கம் ஆட்செபனை தெரிவித்தது. அவர்களுக்கு வெளிநாட்டு தொடர்புகளை வழங்கியதால், இந்த வசதியை தனிப்பட்ட, குடும்ப விவகாரத்திற்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் தடை செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளை அவர்களால் பேண முடியும் என்றும் மத்திய அரசாங்கம் குறிப்பிட்டது.
2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரச உத்தரவின்படி ஆயுள் கைதிகள் அல்லது கைதிகள் வெளிநாட்டில் வசிக்கும் மக்களுடன் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படவில்லை. கைதிகள் மாதத்திற்கு 30 நிமிடங்களுக்கு மிகையாகாமல் 10 நாட்களுக்கு ஒரு முறை உள்நாட்டில் உள்ளவர்களுக்கு அழைப்புகளை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே இது கைதிகளின் அடிப்படை உரிமை அல்ல என்று தமிழக சிறைத்துறை வாதிட்டது. முன்னதாக, இரு தரப்பினரிடமிருந்தும் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர்.
எனினும் இன்று வியாழக்கிழமை,
நீதிபதிகள் என்.கிருபகரன் மற்றும் வி.எம்.வேலுமணி ஆகியோர், நளினியும்
முருகனும் வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களுடன் வட்ஸ்எப் காணொளி அழைப்பு
மூலம் பேச அனுமதிக்கும் உத்தரவை வழங்கினார்கள்.