பாடசாலை அதிபரை கடத்தி கொடூரமாக தாக்கிய இளம் தம்பதி
கம்பஹா, பியகம பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பாடசாலையின் துணை அதிபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பில், அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சியம்பலாபே பகுதியில் உள்ள ஒரு விகாரைக்கு அருகில் துணை அதிபர் வலுக்கட்டாயமாக ஜீப்பில் ஏற்றப்பட்டு, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு
இந்நிலையில் இது தொடர்பில் பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதற்கமைய, குறித்த தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் சியம்பலாபே பகுதியை சேர்ந்த 37 மற்றும் 32 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்தக் கடத்தல் பழைய பகை காரணமாக நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.