முல்லைத்தீவு - மாங்குளம் வைத்தியசாலைக்கு பூட்டு
முல்லைத்தீவு - மாங்குளம் வைத்தியசாலையில் கடந்த 30.04.2021 ஆம் திகதி ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலையில் 30.04.2021 தொடக்கம் 03-05-2021 வரை வைத்தியசாலை செயற்பாடுகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று 03-05-2021 வைத்தியசாலை ஊழியர்கள் மேலும் எட்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலை செயற்பாடுகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை மாங்குளம் வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கோவிட் சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டு தொற்றுக்குள்ளானவர்கள் இங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் முறுகண்டி பகுதியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கடந்த 30.04.2021 ஆம் திகதி கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து மாங்குளம் வைத்தியசாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனை முடிவுகளில் நேற்று (03) கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் எட்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் வைத்தியர், மருந்தாளர், தாதியர், சாரதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரின் கணவர் மல்லாவி வைத்தியசாலையில் பணிபுரியும் நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மல்லாவி வைத்தியசாலை ஊழியர்களிடமும் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்கள் அதிகரித்து செல்வதோடு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதேவேளை முத்துஐயன் கட்டு பகுதியில் மக்கள் நடமாடும் முக்கிய பகுதிகளில் 643
ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர் தொற்றுநீக்கி விசிறும் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை பொலிஸார் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மக்களை தெளிவுபடுத்தும்
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.