வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பொலிஸாரின் அடாவடி: ஊடகவியலாளருக்கும் அச்சுறுத்தல்
வவுனியாவில் காச நோய் தொடர்பில் விழிப்புணர்வு பேரணி ஒன்று மேற்கொள்வதற்கு காச நோய் கட்டுப்பாட்டு பிரிவால் ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுள்ளன.
இதன்போது அங்கு வந்த வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.
தாம் வன்னி பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இது தொடர்பில் தெரியப்படுத்தியதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். எனினும் போக்குவரத்து பொறுப்பதிகாரி அனுமதி வழங்க மறுத்துள்ளார்.
நடவடிக்கைக்கு இடையூறு
இச்சம்பவத்தை அங்கு கடமையில் நின்ற ஊடகவியலாளர்கள் இருவர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில் அழைத்து அவர்களது ஊடக அடையாள அட்டையை பெற்று அதனை பதிவு செய்து அவர்களது நடவடிக்கைக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன், குறித்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்திருந்த முச்சக்கர வண்டிகளையும் அங்கு நின்ற போக்குவரத்து பொலிசாரிடம் கூறி, போக்குவரத்து பொறுப்பதிகாரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த ஊர்வலம் தொடர்பில் வைத்தியர்கள் பிரதி பொலிஸ் அதிபர், வவுனியா மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் தொலைபேசியில் கலந்துரையாடியதன் அடிப்படையில் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊர்வலத்திறகு அனுமதி வழங்கியிருந்தார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனும் பிரதி பொலிஸ் மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







