நினைவுச்சின்ன அழிப்புக்கு உலகளாவிய புலம்பெயர் தமிழர் சமூகம் கண்டனம்
2009ம் ஆண்டு யுத்த சூனிய பிரதேசங்களில் வைத்து சிறிலங்கா ராணுவத்தால் வகை தொகையின்றி கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர் நினைவுகளை நெஞ்சில் நிறுத்தி அவர்களை ஆராதிக்கவும் மற்றும் மன ஆறுதலின் அடையாளமாகவும் முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்டிருந்த இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை அழித்து அவமதிப்பு செய்தமைக்கு உலகெங்கிலுமுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் புலம்பெயர் தமிழர் சமூகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாள் நெருங்கும் இவ் வேளையில், மிகக் கடுமையான கண்டனத்தை, வெளிப்படுத்துகின்றன. சொலமன் தேவாலயம் நினைவுகூரப்படுவது அதன் பிரம்மாண்டமான தோற்றம் காரணமாக அல்ல.மாறாக, ரோமானிய படையினரால் மிக மோசமான முறையில் அழிக்கப்பட்டமைக்காகவே.
மிகக் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகளும், தொடர் ராணுவ பிரசன்னமும் இருந்த வேளையில் இவ்வெட்கக்கேடான செயல் அரங்கேறியுள்ளமை குற்றவாளிகள் யார் என்பதில் எவ்வித சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் சிறிலங்கா அரசாங்கத்தின் பதிலடி நடவடிக்கையாகவே, போரில் இறந்த தமிழர்களை நினைவேந்த முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னம் மோசமான முறையில் அழிக்கப்பட்டுள்ளமை தென்படுகிறது.
தீர்மானம் A / HRC / 46 / L1 ஆனது, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கீழ் ஒரு விசாரணை பொறிமுறை அமைத்து சிறிலங்காவில் இடம்பெற்ற மொத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை மேற்கொண்டு அதன் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும், எதிர்கால சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கும் வழி செய்கிறது.
ஒடுக்கப்பட்ட தேசத்தின் வரலாறு மற்றும் அவலங்கள் அச்சிலோ அல்லது கல் மேல் எழுத்துக்களாகவோ பதிவு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. இது தமிழர்களின் இதயங்களிலும், மனங்களிலும் பேணப்பட்டு தலைமுறை தலைமுறையாக காவிச் செல்லப்படும் துன்பியல் வடுவாகும்.
தமிழர் தாயகத்தில் ஞாபகச் சின்னங்களை அழித்தல், கல்லறைகளை இழிவுபடுத்துதல் போன்ற செயல்கள் எல்லாம், நீதி தேடும் முயற்சியில் தமிழர்களின் மனவுறுதிக்கு மேலும் வலுச் சேர்த்து வரும்.
சிறிலங்கா ராணுவத்தின் மனிதநேயமற்ற செயல்களை கண்டிக்கும்படியும், நினைவு கூரும் உரிமையை சிறிலங்கா அரசு மதிக்க வேண்டும் என அதனை வலியுறுத்துமாறும் பன்னாட்டு அரசுகளையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.