குமுதினி படுகொலையின் 37வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு
இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான படுகொலையின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்ற குமுதினிப் படுகொலை இடம்பெற்று 37 வருடங்கள் கடந்த நிலையில் நெடுந்தீவில் அமைந்துள்ள நினைவு தூபியில் நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நினைவஞ்சலியானது இன்று (15) இடம்பெற்றுள்ளது.
குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும், புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட தினமாகும்.
1985 ஆம் ஆண்டு காலை 07 மணி அளவில் சுமார் 67 பேருடன் பயணித்த குமுதினி படகை சுற்றிவளைத்த கடற்படையினர் குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் என பாராது 36 பேரை குத்தியும் வெட்டியும் கொலை செய்தனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள் பொதுமக்கள் பிரதேச அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



