உத்தேச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு முன்மொழிவு தொடர்பான மனுக்கள் நாளை பரிசீலனைக்கு
உத்தேச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு முன்மொழிவு, இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய தலைமையிலான ஐந்து நீதியரசர் அமர்வில் நாளைய தினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நீதியரசர் அமர்வில் நீதியரசர்களான புவனேக அலுவிஹர, பிரியந்த ஜெயவர்தன, முர்டு பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்.
இந்த யோசனையை எதிர்த்து 18 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி, மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்பனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் முன்னாள் பொதுச்சமூக உறுப்பினர்கள் உட்பட்டவர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த யோசனை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பல்வேறு உட்பிரிவுகளை மனுதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.
மேலும் இந்த யோசனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதிகள் நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும் .மற்றும் வாக்கெடுப்பால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
துறைமுக நகர ஆணையகத்தின் உறுப்பினர்களாக குடிமக்கள் அல்லாதவர்களைக் கூட நியமிக்க உத்தேச யோசனை ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் இந்த யோசனை பொது மக்களின் சட்டமன்ற அதிகாரங்கள், நீதித்துறை
அதிகாரங்கள், நிறைவேற்று அதிகாரங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும்
மக்களின் உரிமையின் உரிமையை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பு விதிகளை மீறுவதாக
ஐக்கிய தேசியக்கட்சி தமது மனுவில் குற்றம் சுமத்தியுள்ளது.