இலங்கை அரசுக்கு பொறிக்கிடங்காக மாறும் செம்மணி : பூமியிலிருந்து வெளிவரும் இனவழிப்பு சாட்சியங்கள்
இலங்கையில் இனப்படுகொலை என்ற ஒன்று நடக்கவே இல்லை என்று சாதித்து வரும் வழிவழியாய் வந்த இலங்கை அரசாங்கங்களினதும் படையினரினதும் முயற்சியை தோற்கடிக்கும் மிகப்பெரிய ஒரு உயிர்ப்புள்ள சான்று செம்மணி..
பொதுவாக யுத்தம் என்று வரும் பொழுது இழப்புக்கள் இரு தரப்பினருக்குமே பொதுவானவை என்று செம்மணி அகழ்வின் பின்னர் தென்னிலங்கை அரசியல்வாதிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றனர்.
கிழட்டு ஓநாயின் புலம்பல்
ஆனால் இங்கு செம்மணி என்பது, யுத்த நேரத்தில் நடந்த தாக்குதல்களால் ஏற்பட்ட மரணங்களின் விளைவு அல்ல.
மாறாக, ஒரு தரப்பினர் தங்களுடைய தனிப்பட்ட அற்ப இச்சைகளுக்காக, உடல், உள, செல்வ ஆசைகளுக்காக சக மனித உயிர் என்றும் பாராமல் சித்திரவதை செய்து கொன்று கொத்து கொத்தாய் புதைத்து, பின்னர் நாங்கள் யுத்தமே செய்தோம், இனப்படுகொலை அல்ல என்பதெல்லாம் ஒரு கிழட்டு ஓநாய் நான் சைவமாய் மாறிவிட்டேன் என்று ஆட்டு மந்தையிடம் கூறுவது போன்றது.
அதிலும் குறிப்பாக போர் என்ற பெயரில் அக்கிரமம் புரிந்த சிங்க தேசத்து படையினருக்கு வக்காளத்து வாங்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள், செம்மணியில் மீட்கப்பட்டது பயங்கரவாதிகளின் உடல் என்று வெள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தகப் பையோடு, கண்சிமிட்டி சிரிக்கும் பொம்மையோடு, கலர் கலர் வளையலோடு, பூப்போட்டச் சட்டையோடு மீட்கப்பட்ட அந்த பச்சிளங்களெல்லாம் குழந்தை பயங்கரவாதிகளா..
செம்மணியை கண்டுகொள்ளாத ஊடகங்கள்
இதை கூறிய முன்னாள் அமைச்சரின் வீட்டில், அவருடைய மகனின் நண்பன் மர்மமாக உயிரிழந்து கிடந்தபோது, தன்னுடை மகனை பயங்கரவாதி என்று சொல்லாத அவரது போலி தேசியவாதத்தை நம்பி கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் அந்த மக்களைத் தான் என்ன சொல்வது..
இது ஒருபுறம் இருக்க, இலங்கையில் பெரும்பாலும் தமிழ் ஊடகங்களைத் தவிர பெரும்பான்மை ஊடகங்கள் செம்மணி தொடர்பில் சிறிதும் கண்டுகொள்ளவில்லை. மாறாக அதற்கு எதிராக ஒரு சில நேர்காணல்களை வெளியிட்டிருந்தன.
இந்தநிலையில் தான் சர்வதேச ஊடகங்கள் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன.
இது மிகச் சிறந்த சந்தர்ப்பம் என்பதோடு, நடந்தது தமிழர் பகுதியில் இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பதை மீண்டும் மீண்டும் சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும். செம்மணி விடயத்தில், அச்சு மற்றும் இலத்திரனியல், இணைய ஊடகங்கள் மாத்திரமல்லாமல் சமூக ஊடகங்களும் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.
தவறான பிரசாரங்கள்..
ஆனால், இந்த சமூக ஊடகங்கள் செம்மணி தொடர்பான வெளிப்படுத்தல்களை மாற்று வழியிலும் கொண்டு செல்லக் கூடிய வல்லமைமிக்கவை.
குறிப்பாக, செம்மணி தொடர்பான வெளிப்படுத்தல்கள் தீவிரமடைந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செல்வாக்கைப் பெற்ற ஒரு சில தமிழ் அடிவருடிகள் அதற்கு புறம்பான கதைகளை அவிழ்த்து விடும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் போன்ற சிலர் உண்மையில், பாதிப்பை எதிர்நோக்கியிருந்தாலும் கூட அதனை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி ஒரு இனத்திற்கு நேர்ந்த பேரவலத்தை மறைக்க முற்படும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பதை இந்த சமூக ஊடகங்கள் வளர்த்துவிடவும் கூடும்.
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக செல்வாக்கு செலுத்தும் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலும் யுத்த காலத்தில் பிறந்த சிறு குழந்தைகளாக இருந்திருக்கலாம்.
செம்மணி வெறும் புதைகுழி அல்ல..
அல்லது அதன் பின்னரான நாட்களில் பிறந்தவர்களாக இருக்கலாம். எனவே, அவர்களில் சிலருக்கு நேரடியான பாதிப்போ அனுபவமோ இருப்பது மிகக்குறைவு.
அவ்வப்போது இணையத்தில் சில சம்பவங்கள் அதிகமாக பேசப்படும். அப்போதைக்கு மட்டும் உணர்ச்சிவசப்பட்டு அந்த பதிவுகளை பகிர்ந்து, நியாயம் கேட்டு போராடிவிட்டு பின்னர் மறந்து போகும் சமூக ஊடகப் போராளிகளாக தற்போதைய தாயக இளைஞர்கள் இல்லாமல், செம்மணி விடயத்தில் இனத்திற்கே உரிய போராட்ட குணத்தோடு அதனை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தலையாய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.
வெறும் உணர்ச்சிமிகுந்த வரிகளாகவும், புகைப்படங்களாகவும் மாத்திரம் செம்மணி இருந்துவிடாது, ஒரு இனப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட மனிதகுல அநீதிக்கு உயிர்ப்புள்ள சாட்சியமாய் செம்மணி இருக்க வழிவகை செய்ய வேண்டியது இன்றைய இளைஞர்களின், தமிழின உணர்வுள்ள அனைத்து தமிழர்களினதும் பிறவிப் பொறுப்பாகும்.
சற்று மீள நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்..
சீருடை தரித்து
பரீட்சை எழுதச் சென்ற
மாணவி..
படு பாதகர்களால்
சிதைக்கப்பட்டு
குடும்பத்தோடு மண்ணுள்
புதையுண்டதை
ஒருமுறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
பாடசாலை சென்று
திரும்பி வரும்போது
கொடூரமாய் கொல்லப்பட்டு
மண்ணுள் புதையுண்டு
இன்று பாடசாலை பையோடு
நீதி கேட்டு நிற்கும் அவலத்தை
ஒரு முறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
கண்சிமிட்டி சிரித்த
பொம்மைக்கு
சோறூட்டி மகிழ்ந்திருந்த
பிஞ்சொன்று..
ஏனென்றே தெரியாமல்
மண்ணுக்குள் புதையுண்டதை,
ஒரு முறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
வயிற்றைக் கிழித்து,
நெஞ்சை பிளந்து..
கோரமான உயிர் பிரிவை
துடிக்க துடிக்க அனுபவித்து
தனித் தேசக் கனவோடு
உறவுகள் மடிந்ததை
ஒரு முறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
தொண்டைக் குழி அடைக்க..
பசியாற தாயின் மார் தேடிய
பச்சிளம் சேய்க்கு..
உயிரற்ற உடலில் இருந்து
உதிரத்தை
மட்டும் கொடுத்த கொடூரத்தை
ஒரு முறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
புதிதாய் பூமிக்கு
வர துடித்த
உயிரொன்று
உயிர் வாசல் அன்றி
சுமந்தவளின் வயிற்றைக் கிழித்து
வந்து உயிர் துறந்த பாதகத்தை
ஒரு முறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
விரோதியே
என்றாலும்,
பசி பிணி வாட்டாது
விருந்து கொடுத்து
விருந்தோம்பிய
அப்பாவி உயிர்களை
ஒரு முறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
கஞ்சிக்கும் வழியின்றி
வரிசையில்
நின்று,
செல்லடித்துச் செத்ததை
ஒரு முறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
இறந்து கிடந்த
உடல்கள்
பிணங்களே என்றாலும்,
உடலையும், உடல் கொண்ட
நகைகளையும்
களவாடிய
நயவஞ்சகத்தை
ஒரு முறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
ஆடை களைந்து
அவமானப்படுத்தி
மனிதத்தின் கோரத்தை
மகிழ்ச்சியோடு கொண்டாடிய அவர்களை
ஒரு முறை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
செம்மணி வெறும் புதைகுழி அல்ல.!! அது, ஆயிரமாயிரம் வலிகளின், உயிர்களின், உணர்வுகளின் வலிய சாட்சியம் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்..
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Benat அவரால் எழுதப்பட்டு, 07 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
