டயானா கமகே தொடர்பில் சாணக்கியன் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு (VIDEO)
கிழக்கில் நாங்கள் கல்வியினூடாக எங்களுடைய மாணவர்களை கட்டியெழுப்ப வேண்டும் என யோசிக்கும் பொழுது புதிதாக தெரிவு செய்யப்பட்ட ராஜாங்க அமைச்சர் டயானா கமகே மன்னாரை ஒரு கலாச்சார சீரழிவுக்கு தள்ளுகின்ற வேலை திட்டத்தை ஆரம்பிக்க முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று அரசாங்கத்தினால் கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை ஒன்றுகூட்டி நிகழ்வுகளை நடத்துகின்றார்கள்.
அண்மையில் பிரதானமான அரசியல் கட்சி, சுகததாச அரங்கில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஒன்றுகூட்டி மாநாடொன்றை நடத்தியுள்ளனர்.
பொருளாதார நிலைமை
இவ்வாறு அவர்கள் ஒன்றுக்கூடி நடத்தும் பொழுது பாடசாலை மாணவர்கள் அதிகளவானவரை ஒன்றுக்கூடி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
இன்று இலங்கையில் இருக்கும் பொருளாதார நிலைமை காரணமாக இளைஞர்கள், யுவதிகள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம் என்கின்ற சிந்தனையில் இருக்கின்றார்கள்.
கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் வெளிநாடு போவதற்காக ஒரு இலட்சத்துக்கு அதிகமானோர் கடவுச்சீட்டை பெறுவதற்கு வரலாற்று சாதனை பதிவு செய்திருக்கின்றது.
இந்த நிலையில் எமது பிரதேசத்தில் 10 தேசிய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. பெயர்ப்பலகைகளுக்காக மட்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டது என்பது வேதனையான விடயமாக இருக்கின்ற பாடசாலைகளை சரியான முறையில் கொண்டு செல்ல முடியாமல் காணப்படுகின்றது.
நான் வெளிநாட்டிலிருந்த போது பலர் கூறினார்கள். இலங்கையிலே நிரந்தரமான அரசியல் தீர்வு வரும் பட்சத்தில் எங்களுடைய முதலீடுகளை நாங்கள் இலங்கைக்கு செய்வோம்.
இலங்கையில் இருக்கும் மொத்த கடனில் 5% ஒரு தனிநபரால் கட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்த தமிழர்கள் உலகத்தில் இருக்கின்றார்கள். இவர்களை கொண்டு எமது பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
மன்னார் மாவட்டத்தில் முழுமையாக இரவு நேர விடுதிகளை உருவாக்க வேண்டும் என்று சொல்கின்ற அளவுக்கு இன்று இந்த அரசாங்கத்தினுடைய புதிய இராஜாங்க அமைச்சர்கள் வந்திருக்கின்றார்கள்.
வடக்கு, கிழக்கில் மாணவர்களினுடைய கல்வி வளர்ச்சியின் ஊடாக எமது மாணவர்களுடைய எதிர்காலத்தை தமிழர்கள் எதிர்காலத்தை பலப்படுத்த வேண்டும் என நினைக்கும் பொழுது இவ்வாறான மோசமான விடயங்களை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்க வேண்டும்.
இன்று நாங்கள் தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை பார்த்தால் புதிதாக கொழும்பில் அமைக்கப்பட்ட தாமரை கோபுரம் திறப்பு விழா இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த கோபுரத்திற்கு நுழைவதற்கான அனுமதிச்சீட்டில் தமிழ் மொழியை அகற்றி சீன மொழி, ஆங்கில மொழி, சிங்கள மொழி ஆகியன அச்சிடப்பட்டுள்ளது. நாங்கள் தமிழர்கள், தமிழ் எமது உரிமை என போராடுகின்றோம்.
தமிழ்மொழி பெயர்ப்பலகை
அரசாங்கத்தினுடைய முக்கியமான திறப்புவிழா தினத்திலேயே சீன மொழி இருக்கின்றது ஆனால் இதற்கு சீன தூதுவர் தெரிவித்திருக்கின்றார் இது பொய்யான விடயம் என்று. காலிமுகத்திடலில் உள்ள போர்ட்சிட்டியில் தமிழ்மொழி இல்லாமல் பெயர்ப்பலகை இடப்பட்டிருந்தது.
அதைப்போன்று தான் இதனையும் அவர்கள் அவ்வாறு செய்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வந்ததன் பிற்பாடு மாற்றியுள்ளனர். இன்று எமது நாட்டில் தமிழனுக்கும், தமிழ்மொழிக்கும் இந்த நிலைமை தான்.இதனை மாற்ற மாணவர்களுடைய கல்வியால் முடியும்.
அதே நேரத்தில் நாங்கள் முழுமையாக போராடி ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதாக இருந்தால் இலங்கையினுடைய பொருளாதாரத்தை நாங்கள் மாற்றி அமைத்து அதனூடாக தமிழர்களுடைய பொருளாதாரத்தையும் எதிர்காலத்தில் மாற்றி அமைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் இலங்கை இறைவரித்திணைக்கள ஆணையாளர் மு.கணேசராஜா,புரவலர் வி.ரவீந்திரமூர்த்தி உட்பட பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் தற்போதுள்ள மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.