சீ.ஐ.டியினர் எனது சிறப்புரிமையை மீறியுள்ளனர் - சம்பிக்க ரணவக்க
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் 2018 - 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான காலத்தில் தமது தொலைபேசி உரையாடல்களை இரகசியமாக ஒட்டு கேட்டுள்ளதாகவும், நீதவானின் அனுமதியின்றி அவ்வாறு செயற்பட்டுள்ளதன் காரணமாக தனது தனிப்பட்ட உரிமை மாத்திரமல்லாது நாடாளுமன்ற சிறப்புரிமையையும் மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகரின் அனுமதியுடன் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தொலைபேசி உரையாடல்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வழங்கியதால், தொலைபேசி சேவையை வழங்குநரும் எனது சிறப்புரிமைகளை மீறியுள்ளார்.
எனது சிறப்புரிமைகளை மீறிய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் தொலைபேசி சேவை வழங்குநரை நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைத்து அடிப்படை விசாரணைகளை நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இது உயர் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கக்கூடிய குற்றம். அத்துடன் இது சம்பந்தமாக சட்டமா அதிபரிடம் அறிக்கையை பெற்று அதனை நாடாளுமன்ற அவையில் சமர்பிக்குமாறு சபாநாயகரிடம் கோருகிறேன்.
நகர அபிவிருத்தி அமைச்சில் நடந்ததாக கூறப்படும் மோசடி சம்பந்தமான தகவல்களை கேட்டறிய குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வருமாறு கூறி எனக்கு அழைப்பாணை அனுப்பட்டிருந்தது.
இதற்கமைய நான் கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் நேர்நிலையானேன்.
அங்கு நடத்திய விசாரணைகளில் எனது தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதை நான் உணர்ந்து கொண்டேன் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.