மட்டக்களப்பில் வீடுகளை டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த 09 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்
மட்டக்களப்பு நகரில் தமது வீடுகளை டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த 09பேருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில பகுதிகளில் தொடர்ந்து டெங்கு அபாயம் நிலவுவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் இன்றைய தினம் மாபெரும் டெங்கு ஒழிப்பு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களும் தூய்மைப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாநகரசபை,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதி டெங்கு தாக்கம் அதிகளவில் இனங்காணப்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் விசேட நிகழ்வாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பினை ஏற்படுத்தும் குடம்பிகள் இனங்காணப்பட்ட வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பார் வீதியில் வெள்ள நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் நீரை வழிந்தோடச்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நீர்நிலைகளில் காணப்பட்ட கழிவுகளும் அகற்றப்பட்டன.