யாழில் கனடா பிரஜை ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்!இருவர் கைது
யாழ்.அனலைதீவில் கனடாவிலிருந்து வருகை தந்த வயோதிபரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்தமை மற்றும் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் முதன்மை சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த 32 மற்றும் 24 வயதுடைய இருவரே இன்று (16.04.2023) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நட்பு ரீதியான கட்டளையில் செய்யப்பட்டதாக சந்தேகநபர்களினால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடுமையான தாக்குதல்
இதற்கமைய கடந்த பெப்ரவரி (23.02.2023) ஆம் திகதி அனலைதீவில் வீடு புகுந்த வன்முறைக் கும்பல் அங்கு வசித்த வயோதிபர்கள் இருவர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட மூவரை கடுமையாகத் தாக்கி 4 பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் 4 தங்க வலையல்கள் உள்ளிட்ட 13 லட்சம் பெறுமதியான பொருட்களையும் கொள்ளையிட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவத்தில் கனடாவில் வசிக்கும் அனலைதீவைச் சேர்ந்த நாகலிங்கம் சுப்ரமணியம்
(குருசாமி வயது 75) என்பவர் கால்கள் அடித்து முறிக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
அவர் யாழ்.போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக கனடா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை
இந்த நிலையில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்தின் உத்தரவில் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் விசாரணைகளில் பருத்தித்துறையைச் சேர்ந்த 32 வயதுடைய முதன்மை சந்தேகநபர் மற்றும் 24 வயதுடையவர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதன்மை சந்தேகநபர் வாக்குமூலம்
கனடாவில் உள்ள ஒருவர் இந்தியாவில் வசிக்கும் ஒருவர் ஊடாக ஒருங்கிணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டதாக முதன்மை சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த வாக்குமூலத்தில், "இந்தியாவில் வசித்த வரதன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். அதனால் திட்டமிட்டபடி எதுவுமே செய்ய முடியவில்லை ஆகவே வேலனைக்குச் சென்று மீன்பிடிப் படகை வாடகைக்கு அமர்த்தி அனலைதீவு சென்று குறித்த வயோதிபர் மற்றும் அவர் சார்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினோம்.
மேலும், நகைகள் மற்றும் தொலைபேசிகளை எடுத்துக்கொண்டு தப்பி வந்துவிட்டோம்" என்று முதன்மை சந்தேகநபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைபடுத்தல்
இது தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரிடமிருந்தும் கொள்ளையிடப்பட்ட தங்க வலையல்கள் மற்றும் மோதிரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் நாளை (17.04.2023) முன்னிலைபடுத்தப்படவுள்ளனர்.