மகாபோதியின் முழுமை அதிகாரத்தைக் கோரும் பௌத்தர்கள்: பரிசிலீப்பதாக உறுதியளித்த இந்திய பிரதமர்
இந்தியா புத்த கயாவில் உள்ள மகாபோதி விகாரையின் நிர்வாகத்தில் முழு பௌத்த பிரதிநிதித்துவத்தை அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்திய பிரதமர் பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்தபோது, நான்கு மகாநாயக்க தேரர்கள் கையொப்பமிட்ட கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு கையளித்தபோதே, மோடி, அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கும் புத்தகயாவிற்கும் இடையிலான உறவு
தற்போது நான்கு பௌத்தர்களையும் நான்கு இந்துக்களையும் உள்ளடக்கிய புத்தகயா விகாரை நிர்வாகக் குழுவின் முழு கட்டுப்பாட்டையும் கோரி, இந்தியாவில் பௌத்தர்களால் இரண்டு மாத கால போராட்டப் பிரசாரம் நடந்து வருகிறது.
இந்தநிலையில் பிரதமர் மோடியிடம் அனுராதபுரத்தில் உள்ள ஸ்ரீமகா போதியா விகாரையின் விகாராதிபதியான அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன கையளித்த, இது தொடர்பான கடிதத்தில், மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்புடுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய வாககொட ஸ்ரீஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய கரகொட உயங்கொட தேரர் மற்றும் ராமண்ணா மகாநாயக்கர், வணக்கத்திற்குரிய மகுலேவே ஸ்ரீ விமல தேரர் ஆகியோர் கையொப்பமிட்டிருந்தனர்.
இலங்கைக்கும் புத்தகயாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை இந்தக் கடிதம் விபரித்திருந்தது. அத்துடன், இந்த உறவுகள் பேரரசர் அசோகரின் காலம் வரை செல்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தது.
இதற்கிடையில், இந்திய மகாபோதி சங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளரான மேதங்கர தேரர், புத்தர் ஞானம் பெற்ற இடத்தை நிர்வகிக்கும் உரிமையை பௌத்தர்களுக்குப் பெறுவதற்காக இலங்கையில் இருந்து அனகாரிக தர்மபாலரால் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்ட வரலாற்று பிரசாரத்தை, பிரதமர் மோடிக்கு விளக்கியுள்ளார்.
இதனையடுத்து, தாம் புதுடில்லி திரும்பியதும் இந்த விடயத்தில் ஆலோசித்து, அதனை எவ்வாறு தீர்க்க முடியும் என்று பார்ப்பதாக, நரேந்திர மோடி கூறியதாக மேதங்கர தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |