குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி - விவசாயிகள் மூவர் பொலிஸாரால் கைது
முல்லைத்தீவு குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள வயலொன்றில் விவசாயம் செய்த காணி உரிமையாளர் ஒருவரை சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியொருவர் தடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குருந்தூர் மலையில் கீழாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களை பௌத்த பிக்கு ஒருவர் தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளாதாக தெரியவருகின்றது.
காணொளி: கஜிந்தன்
பௌத்த பிக்கு அடாவடி
இந்த காணிகளுக்கு அண்மையாக இன்று(10) காலை குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் காணி உரிமையாளரான சசிகுமார் என்பவர் தனது பணியாட்கள் மூலம் உழவு செய்துள்ளார்.
இதன்போது அவ்விடத்துக்கு வருகை தந்த குருந்தூர்மலை பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதி மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர், பொலிஸார் இணைந்து விவசாய நடவடிக்கைகளை தடுத்துள்ளனர்.
விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளையும், உழவியந்திரத்தினையும் கைது செய்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பொலிஸாரால் கைது
குறித்த காணியின் உரிமையாளர் சசிகுமார் இதய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவரின் பணியாளர்கள் மூலமாக விவசாய நடவடிக்கைக்கு ஆயத்தங்களை மேற்கொண்ட போதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பணியாளர்களான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.