முகாமையாளரை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேருந்து சாரதிகள்
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சங்க பேருந்து சாரதிகள் இன்று காலை 6 மணி முதல் ஒரு மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போக்குவரத்து பேருந்து சாலை முகாமையாளரை உடனடியாக இடமாற்ற கோரியும் சிறந்த ஒரு நிர்வாக திறனுள்ள முகாமையாளரை தங்களுக்கு நியமிக்க கோரியும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து பேருந்து சாலை முகாமையாளர் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுவதாகவும் தொடர்ச்சியாக ஊழியர்களுடன் முரண்பாடு ஏற்படுவதன் காரணமாகவும் முகாமையாளருக்கு எதிராக இவ்வாறு போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இலஞ்சம், ஊழல் மற்றும் மது பாவனைக்கு துணைபோகும் ஒரு முகாமையாளர் தங்களுக்குத் தேவையில்லை எனவும் குறித்த முகாமையாளர் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனம் எடுக்க வேண்டும் மற்றும் புதிய ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.