மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
மட்டக்களப்பு- மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் 2022ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டம் நேற்று (19) வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டு சபை அமர்வில் கலந்துகொண்ட பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் (C.Puspalingam) தலைமையில் நடைபெற்ற இவ் அமர்வில், 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது.
தவிசாளர் உட்பட 16 உறுப்பினர்களைக் கொண்ட மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில், சபை அமர்வின்போது 16 உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது வரவு செலவு திட்டத்திற்கு 15 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததுடன், தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் மாத்திரம் வரவு செலவு திட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
2022ம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு செயற்பாடுகளும் இதன் போது இச் சபையில்
முன்வைக்கப்பட்டுள்ளது.