மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள 7 பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள லில்லி வீதியில் கடந்த மார்ச் மாதம் பெண் ஒருவரின் தங்கசங்கிலியை அறுத்த சம்பவம் மற்றும் கடந்த சனிக்கிழமை திருகோணமலை வீதி பிள்ளையாரடி பகுதியில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு அவரது தோல் பையையும் அறுத்தெடுத்து கொண்டு தப்பி ஓடியுள்ள சம்பவம் உட்பட மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற 3 தங்க சங்கிலி அறுப்பு சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை கரடியனாறு பொலிஸ் பிரிவில் ஒரு மோட்டர்சைக்கிளும், வவுணதீவு பொலிஸ் பிரிவில் மோட்டர்சைக்கிள் மற்றும் தங்க சங்கிலி அறுப்பு உட்பட இரண்டு கொள்ளை சம்பவங்களும், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் தங்க சங்கிலி, தாலிக் கொடி அறுப்பு கொள்ளை சம்பவங்களும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 3 தங்க சங்கிலி அறுப்பு சம்பவங்களும் இவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், குறித்த இரு சந்தேகநபர்களும் தாம் கொள்ளையிட்ட மோட்டார்சைக்கிள்களை பயன்படுத்தியே ஏனைய கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு வவுணதீவு, கரடியனாறு, களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, கல்முனை , திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தாமே குறித்த குற்றங்களை செய்ததாக இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்ற அனுமதியை பெற்று தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |