மட்டக்களப்பு மாநகரசபையில் 13 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம்
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர்,பிரதி ஆணையாளர் உட்பட மட்டக்களப்பு மாநகரசபையில் 13 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த மூன்று தினங்களாக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் உட்பட மாநகரசபையில் கடமையாற்றும் ஐந்து பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த மூன்று தினங்களுக்குள் மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உட்பட எட்டுப்பேர் கோவிட் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் இன்றைய தினம் புளியந்தீவு பகுதியில் 87 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 16 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அதிகளவில் அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் கடமையாற்றுவோர் கோவிட் தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




