கோட்டாபய போட்டியிடவில்லை என்றால் பசில் போட்டியிட தகுதியானவர்! - பொதுஜன பெரமுன
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவார் எனவும், அவர் போட்டியிடவில்லை என்றால் அதற்கு தகுதியான நபர் பசில் ராஜபக்ச எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. அப்போது நாட்டு மக்கள் கோட்டாபய ராஜபக்சவை கோருவார்கள்.
அவர் போட்டியிட மாட்டார் என பல்வேறு தகவல்களை வெளியிட்டு, பொதுஜன பெரமுனவை அழிக்க முயற்சிப்போரின் கனவு பலிக்காது.
ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்றால், நாட்டின் அனைத்து கட்சிகளையும் இணைந்து கொண்டு, நாட்டு மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய அறிவும், நாட்டை கட்டியெழுப்பும் அனுபவமும் உள்ள தலைவராக பசில் ராஜபக்ச இருக்கின்றார்.
பசில் ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியானவர் என்பதைப் பொதுஜன பெரமுன என்ற வகையில் நாங்கள் தெளிவாகக் கூறுகின்றோம்.
பசில் ராஜபக்ச போட்டியிடுவதை விரும்பாதவர்கள் சேறு பூசி வருகின்றனர். எனினும் பொதுஜன பெரமுனவை வீழ்த்த முடியாது எனவும் சஹான் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.