தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தொடர்! வைகோ கடும் எச்சரிக்கை
தமிழர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ‛தி பேமிலிமேன் 2' வெப் தொடரைத் தடை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு, வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,
‛தி பேமிலிமேன் 2' வெப் தொடரை ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கின்றேன். தமிழர்களைப் பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள்.
இராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக் காட்சிகள் இருக்கின்றன.இத்தகையக் காட்சிகளைக் கொண்ட இந்த தொடர் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது.
அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ் நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.
‛தி பேமிலிமேன் 2' வெப் தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றும் வைகோ குறிப்பிட்டுள்ளார்.