இலங்கையின் போராட்டம் பல இனங்களை ஒன்றிணைத்துள்ளது- ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர்
இலங்கையில் மேலும் வன்முறைகளைத் தடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன் நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நிதானத்தையும் அர்த்தமுள்ள உரையாடலையும் அவர் வலியுறுத்தியுள்ளார்
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது பிரதமரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வருவதையும், அதைத் தொடர்ந்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு எதிரான வன்முறையையும் கண்டு தாம் கவலையடைந்துள்ளதாக மிச்செய்ல் பெச்சலெட் தெரிவித்துள்ளார்.
நடந்த அனைத்து தாக்குதல்களை தொடர்பிலும்,சுதந்திரமாகவும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
வன்முறையைத் தூண்டுபவர்கள் அல்லது ஒழுங்கமைப்பவர்கள் உட்பட, பொறுப்பானவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது அவசியமாகும்
பொலிஸாருக்கு ஆதரவாக நிறுத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் உட்பட அதிகாரிகள், நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அவசரகாலச் சூழலில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும்
அத்துடன் எதிர்ப்பை ஒடுக்கவோ அல்லது அமைதியான போராட்டத்தைத் தடுக்கவோ தமது அதிகாரங்களை பயன்படுத்தப்படுத்தக்கூடாது என்று பெச்சலெட் கோரியுள்ளார்;.
கடுமையான பொருளாதார நெருக்கடியானது பெரும்பாலான இலங்கையர்களுக்கு அன்றாட வாழ்க்கையை ஒரு போராட்டமாக மாற்றியுள்ளது.
அத்துடன் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஜனநாயக வாழ்வில் பங்கேற்பதைக் கோருவதற்காக பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களை இது ஒன்றிணைத்துள்ளது.
இந்தநிலையில், நீண்ட காலமாக பாகுபாடு மற்றும் மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான அடிப்படை காரணங்களைத் தீர்க்குமாறு அரசாங்கத்தை அவர் கோரியுள்ளார்.