அயோத்தி தலைமை அர்ச்சகர் தலைமையிலான குழு இன்று தமிழர் பகுதியில்..
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர், இன்று(24.02.2026) விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் - தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர், மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கும் சென்றுள்ளனர்.
மன்னார் விஜயம்
இதனைத் தொடர்ந்து, சுவாமி கைலாசநந்த்கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அதன் பின்னர், விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு, ஆலயத்தையும் சுற்றி குறித்த குழுவினர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - ஆஷிக்
முதலாம் இணைப்பு
இந்தியாவின் அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைலாஷானந்த் கிரி ஜி மஹாராஜ் தலைமையிலான 14 பேர் கொண்ட விசேட தூதுக்குழுவினர் நேற்று காலை (23.02.2026) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (UL-192) விமானம் மூலம் வருகை தந்த இக்குழுவினரை, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க விமான நிலையத்தில் வரவேற்றுள்ளார்.
விஜித ஹேரத் உடன் விசேட கலந்துரையாடல்
இக்குழுவினர் இலங்கையிலுள்ள பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதில் மன்னார் திருக்கேதீஸ்வரம், யாழ்ப்பாணம் நகுலேஸ்வரம், திருகோணமலை கோணேஸ்வரம், நுவரெலியா சீதை அம்மன் கோவில், பண்டைய சிவ ஆலயங்கள், ஆகியவற்றுக்கு இவர்கள் செல்லவுள்ளனர்.
தமது விஜயத்தின் போது, வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உடன் விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் குழுவினர் ஈடுபடவுள்ளனர்.




