ரிஷாட்டின் குடும்பத்தை உனடியாக கைது செய்யுங்கள்! பௌத்த தேரர் வலியுறுத்தல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மலையகத் தமிழ் சிறுமி மீதான விசாரணைக்காக ரிஷாட்டின் குடும்பத்தினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்காகவே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவந்ததாக தெரிவிக்கின்ற சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர், இந்த விவகாரத்தில் முழுமையான சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சரான ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் உதவியாளரானத் தொழில்புரிந்த நுவரெலியா - டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது இஷாலினி என்கின்ற சிறுமி கடந்த 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
இது குறித்த விசாரணைகளில் நாளுக்கு நாள் அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர். ரிஷாட்டின் வீட்டிலிருந்த அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதாரண நபரது வீட்டில் இப்படியான சம்பவம் இடம்பெற்றிருந்தால் அந்த வீட்டிலுள்ள அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே விசாரணை நடத்தப்படும் என்றாலும் ரிஸாட்டின் வீட்டார் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதையிட்டுக் கவலையடைவதாகவும் சுதத்த தேரர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள் இந்த சம்பவம் குறித்து வாய்த்திறக்காமலிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், உடனடியாக அவர்களும் நீதிக்காக வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.