அமைச்சர்களின் மூளைகள் பழுதடைந்து விட்டதா!பதிலடி கொடுத்த சரத்பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது இந்த மாத சம்பளத்தை கொரோனா நிதியத்துக்கு ஒப்படைக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் கூறும் கொரோனா நிதியத்துக்கு எமது பணத்தை ஒப்படைத்தால் அந்த நிதியத்துக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலையின் மத்தியில், அமைச்சர் ஒருவர் பருப்பு சாப்பிட முடியாவிட்டால் பயறு சாப்பிடுமாறு கூறுகின்றார். ஆனால், பருப்பை விட பயறு விலை அதிகம்.
எனவே, இவ்வாறான அமைச்சர்கள் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவையாகப் பார்க்கின்றனர். எவ்வித அர்த்தமும் இல்லாமல் நக்கல், கேளிக்கைகளுடன் பதிலளிக்கின்றனர்.
இவர்கள் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. இதே அமைச்சர் தான் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே செல்வதைத் தடுப்பதற்காக தான் எரிபொருள் விலை அதிகரிப்பு எனக் கூறினார்.
மருந்து விலை அதிகரிப்புக்கும் பொருத்தமற்ற காரணங்களை சில அமைச்சர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த அமைச்சர்களின் மூளைகள் பழுதடைந்து விட்டதா என தெரியவில்லை.
இன்று நாட்டில் இருப்புகளும் இல்லை அதேபோல், நாட்டிலுள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்தம் இருப்பில் இல்லை.
இவ்வாறு நாடு பின்னோக்கிச் செல்லும் போது, அரசாங்கம் தூங்கிக்கொண்டா இருக்கிறது என எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.