அமரகீர்த்தி கொலை வழக்கு தீர்ப்பிற்கு எதிராக இரு தரப்பிலிருந்தும் மேன்முறையீடு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு தீர்ப்பிற்கு எதிராக அரச தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பு என்பன மேன்முறையீடு செய்யத் தீாமானித்துள்ளன.
கம்பஹா மூன்று நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரும், மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, நீதிபதிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமர்வில் இருந்த மூன்று நீதிபதிகளில் இருவர் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 12 பேரை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தனர்.
ஆனால் அமர்வின் தலைவர் நீதிபதி, அனைத்து குற்றச்சாட்டுகளிலும் சந்தேக நன்மை வழங்கி அனைத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.
இந்த சூழ்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தாங்கள் நிரபராதிகள் என வலியுறுத்தி மேல் நீதிமன்றத்தை அணுகத் தயாராகி வருகின்றனர்.
அதேவேளை, இந்தக் குற்றத்தில் மேலும் பலர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியிருந்தது என்ற நிலைப்பாட்டில் சட்டமா அதிபர் உள்ளார்.
சட்டப்படி வழங்கப்பட்டுள்ள 28 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்படுவதாக துணை சட்டமா அதிபர் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளும் சிறை நிர்வாகம் மூலம் மேன்முறையீட்டு நடவடிக்கைகளுக்கான சட்ட உதவிகளை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.