இந்திய மாநில முதல்வரைப் போன்று செயற்படும் அநுர : சாடும் முன்னாள் இராஜதந்திரி
இலங்கையில் இந்திய ஆயுத உற்பத்திசாலை மற்றும் ஆயுதக் களஞ்சியம் என்பனவற்றை உருவாக்குவது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதாகவே இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது பல்வேறு சமிக்ஞைகள்
இந்தியாவுடன் இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதாக அரசாங்கத் தரப்பில் கூறிய போதிலும் இந்திய ஊடகங்கள் இதனை பாதுகாப்பு ஒப்பந்தம் என அடையாளப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சுயாதீனமான நாடாக இருக்க வேண்டுமெனவும் இந்தியா, சீனா அல்லது அமெரிக்காவின் தரப்பாக செயற்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார் இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவின் மாநிலமாக மாற்றமடைந்து விடக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய நிலைமையில் இலங்கை ஜனாதிபதி இந்திய மாநிலமொன்றின் முதல்வரைப் போன்று செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு சமிக்ஞைகள் வெளிப்பட்டதாகவும் வேறு எந்தவொரு நாட்டு தலைவருக்கும் வழங்கப்படாத வரவேற்பு வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை சுதந்திர சதுக்கத்தில் வெளிநாட்டு தலைவர் ஒருவரை இதுவரையில் வரவேற்றது கிடையாது மேலும் மித்ர விபூஷன பதக்கம் இந்திய பிரதமருக்கு ஜனாதிபதியினால் அணிவிக்கப்பட்டதாக தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அனுராதபுரம் விமான நிலையத்திலிருந்து மோடி இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றது மற்றுமொரு சமிக்ஞையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
வழமைக்கு மாறான அனுமதிகள்
அனுராதபுரம் விமான நிலையம் சில மணித்தியாலங்களுக்கு சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டமை வித்தியாசமான ஓர் நிகழ்வாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம், நமது எந்தவொரு இடத்திற்கும் வந்து செல்வதற்கு இந்திய பிரதமருக்கு பூரண அனுமதி வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் புறப்பட்டுச் சென்ற விதமும் வித்தியாமானது எனவும் அவர் ராமர் சேது பாலம் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதியின் ஊடாகவே உலங்கு வானூர்தியில் பயணம் செய்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்திற்கும் மன்னாருக்கும் இடையில் பாலமொன்றை அமைப்பது தொடர்பிலான முனைப்புக்கள் 2001ம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொண்டு செல்லும் போது ராமர் சேது பாலம் அமையப் பெற்றுள்ளதாக கூறப்படும் பகுதி வழியாக பயணிப்பதன் மூலம் அடுத்த செய்யப் போவது இதைத்தான் என்ற சமிக்ஞையை இந்திய பிரதமர் வழங்கியுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அனைத்து விடயங்களையும் பார்வையிடும் வித்தியாசமான வழமைக்கு மாறான அனுமதிகளை நாம் இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாகவே தென்படுகின்றது இது ஆரோக்கியமானதல்ல என தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் வெளிநாடொன்றுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் உடன்படிக்கைகள் மூடிமறைக்கப்படவில்லை எனவும் தற்போதைய அரசாங்கம் இந்த ஒப்பந்தம் பற்றிய விபரங்களை ஏன் மூடி மறைக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு கெட்ட விடயமும் இல்லையென்றால் ஏன் தற்போதைய அரசாங்கம் ஒப்பந்தம் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்த தயங்குகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலக வர்த்தகப் போர் விவகாரத்திலும் நாம் எந்தவொரு நாட்டின் பக்கத்தினையும் எடுக்கக் கூடாது எனவும் நாம் நடுநிலையாக செயற்பட வேண்டுமெனவும் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |