நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: உதய கம்மன்பில
அரசாங்கத்தின் மற்றுமொரு மோசடிக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் (02.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தேசிய கடன் மறுசீரமைப்பு தீர்மானத்துக்குத் நாம் ஏன் வாக்களித்தோம் என்பதைப் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அறியாமல் உள்ளார்கள்.
நாடாளுமன்ற பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அமையச் செயற்படுகிறார்கள்.
அமைச்சரவை கொள்கை
தேசிய கடன் மறுசீரமைப்புக்கான தீர்மானங்கள் எடுக்கும் சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கடன் எந்த வகையில் மறுசீரமைக்கப்படும் என்பது தொடர்பான திட்டம் அமைச்சரவை கொள்கை பத்திரத்தில் தெளிவாக உள்ளடக்கப்பட வேண்டும் எனச் சட்டமா அதிபர் கடந்த மாதம் 27ஆம் திகதி திறைசேரியின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக வலியுறுத்தியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சட்டமா அதிபர் வழங்கிய ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
பாரிய மாற்றம் ஏற்படுத்தும்
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சட்ட உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.
எதிர்வரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.
அதன்படி அரசாங்கத்தின் மற்றுமொருமோசடிக்கு அமைச்சரவை ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய வளங்களைப் பாதுகாக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கையை ஜனாதிபதி இல்லாதொழிக்கிறார். நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பு எதிர்வரும் காலங்களில் பாரிய மாற்றம் ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |