எரிபொருள் விலை தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட எதிர்வுகூறல்
உலகச் சந்தையில் நிலவும் அசாதாரண நிலைமைகள் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையைச் சிறிதளவு உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகமவில் இன்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணியில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிசக்தி துறையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் வேகமாக உயர்ந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒரு லீட்டர் டீசல் 382 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதன் உண்மையான விலை 482 ரூபாவாகும். அதாவது, ஒரு லீட்டர் டீசலுக்கு அரசாங்கம் 100 ரூபா மானியமாக வழங்குகிறது என தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்காக மட்டும் அரசாங்கம் பாரியளவு நிதியை ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், உலகச் சந்தையில் விலை தொடர்ந்து அதிகரித்தால், உள்நாட்டிலும் சிறிதளவு விலையை உயர்த்த வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார். எரிசக்தி நெருக்கடி மின்சாரத் துறையையும் பாதித்துள்ளது.
ஒருவேளை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டாலும், 96% சாதாரண நுகர்வோரை அது பாதிக்காத வகையில் அரசாங்கம் 1,500 கோடி ரூபா மானியத்தை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
எங்கள் அரசாங்கம் உழைக்கும் மக்களுக்கானது எனவும் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், பொதுமக்களின் சுமையைக் குறைக்க அதிகபட்ச மானியங்களை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிலக்கரி மற்றும் எரிபொருள் விலையேற்றம், அத்துடன் நீர்மின் உற்பத்தி நிலையங்களில் நீரின் அளவு குறைந்துள்ளமை போன்ற சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் முறையான திட்டமிடலுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.