இலங்கையில் பிள்ளைகளால் தாய் அல்லது தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஐந்து பதிவு
இலங்கையில் தன் பிள்ளைகளால் தாய் அல்லது தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஐந்து பதிவாகியள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் செங்கலடி பிரதேசத்தில், 65 வயது தாய் ஒருவர் தன் 40 வயது மகனால் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வந்த தன் மகனால் தாய் இவ்வாறு கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருடதிற்குள் இதே போன்று, தம் பிள்ளைகளால் தாய் அல்லது தந்தை கொலைசெய்யப்பட்ட 5 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யும் வேளையிலும் அவர் குடி போதையில் இருந்துள்ளார்.
மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 65 வயதான வேலுப்பிள்ளை தவமணி என்றும், இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் மகன் 45 வயதான வேலுப்பிள்ளை சந்திரன் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
