ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சொத்துக்களை விட, பல பில்லியன் ரூபாய்களால் பொறுப்புக்கள் அதிகம்!
சொத்துக்களை விட பொறுப்புக்கள் அதிகம்
கடனில் சிக்கியுள்ள தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தற்போதைய பொறுப்புகள் அதன் சொத்துக்களை விட அதிகமாக உள்ளன.
கணக்காய்வு அறிக்கை இதனை வெளிப்படுத்தியுள்ளது.
இதன்படி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தற்போதைய கடன்கள், அதன் தற்போதைய சொத்துக்களை விட 214.6 பில்லியன் ரூபாய்கள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நட்டம்
இந்தநிலையில் இந்த நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நிகர நட்டம் 49,704.51 மில்லியன் ரூபாவாகும் என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த பெப்ரவரி 7 அன்று திகதியிட்ட அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சேவைகள் தொடர அரசாங்கம் நிதியுதவிகளை வழங்கும் என்று திறைசேரியின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மே மாதம் பதவியேற்றவுடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது, ஒவ்வொரு வருடமும் இழக்கப்படும் பில்லியன் கணக்கான ரூபாவை கருத்தில் கொண்டு, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்க முன்மொழிந்தார்.
அத்துடன் எயார்லைன்ஸின் இழப்பை ஏழை எளிய மக்களே சுமக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.