முல்லைத்தீவு பகுதியில் கடுமையாகத் தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி (Photos)
முல்லைத்தீவு - எல்லைக்கிராமமான கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர், பெரும்பான்மை இனத்தவர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதல் நேற்று முன்தினம் (19.02.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
முல்லைத்தீவு - எல்லைக்கிராமமான கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில் வசித்துவரும் சிவக்கொழுந்து கந்தசாமி என்ற கால்நடை வளர்ப்பாளரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
கட்டிவைக்கப்பட்டு தாக்குதல்
சம்பவத்தன்று பெரும்பான்மை இனத்தவர்கள் கொக்குத்தொடுவாய் பகுதியில் கால்நடைகளை வைத்துப் பராமரித்துவரும் குறித்த தமிழ் கால்நடைவளர்ப்பாளருக்குச் சொந்தமான கால்நடைகளைத் திருட முற்பட்டதாகவும், குறித்த திருட்டு முயற்சியைத் தடுக்கும்போதே தான் பெரும்பான்மை இனத்தவர்களால் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் குறித்த கால்நடை வளர்ப்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ் மக்களின் கால்நடைகளை வெலிஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தொடர்ச்சியாகத் திருடிவருகின்றனர். அவ்வாறு திருடப்படும்போது தடுக்கின்ற தமிழ் மக்களை, பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்குகின்ற சம்பவங்களும் தொடர்சியாக இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவிக்கும் அபாயம் எழுந்துள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
இந்நிலையில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் கொக்குத்தொடுவாய் மக்கள் முறையிட்டுள்ளதோடு கொக்கிளாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு கொக்குத்தொடுவாய் மக்கள் படுகொலை செய்யப்பட்டு பலவந்தமான முறையில் இராணுவத்தினரால் வெளியேற்றபட்டதுடன், அவர்களின் பூர்வீக வயல் நிலங்கள் உட்பட்ட மணலாறு பிரதேசம் முற்றுமுழுதாகச் சிங்களமயமாக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போது வரை அப்பகுதியில் குடியேறியுள்ள பெரும்பான்மையின சமூகத்தினர் மகாவலி
அதிகாரசபை உள்ளிட்ட அரச துணையோடு தமிழ் மக்கள்மீது பல்வேறு ஆக்கிரமிப்பு
நடவடிக்கைகளைத் தொடர்சியாக முன்னெடுத்து வருவதாகவும் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
