ரஞ்சன் ராமநாயக்கவின் பொது மன்னிப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இந்த ஆவணத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன இன்று (13) உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சகோதரர்களில் ஒருவரான தினேஷ் அசரப்பா குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் நம்பிக்கை
இதன்போது,“ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தொடர்பான இரண்டு ஆவணங்களில் இன்று கையொப்பமிட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிறையில் இருந்தபோது ரஞ்சன் ராமநாயக்க நடந்துகொண்டது தொடர்பான ஆவணமும், நீதித்துறை தொடர்பாக அவர் அளித்த அறிக்கையும் கையொப்பமிட்டப்பட்டுள்ளது.
பொது மன்னிப்பு
இந்த அறிக்கைகள் மூலம் நீதித்துறை, சகோதரத்துவ உறுப்பினர்களின் நற்பெயருக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அவர் செயற்படவில்லை எனவும் அவ்வாறு செயற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படும் என்று நம்புகிறோம்.”என கூறியுள்ளார்.
குற்றச்சாட்டு
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையிலேயே அவர் கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் அவர் அந்த கடிதத்தில் தமது தவறுக்கு மன்னிப்பை கோருவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இரண்டு தடவைகளாக மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கள்
தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரு வழக்கில் கடூழியச் சிறைத்தண்டனையும்
மற்றும் ஒரு வழக்கில் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.