இந்தியாவின் சட்டவிரோத கடற்றொழிலுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு டக்லஸ் தேவானந்தவிற்கு வலியுறுத்தல்
இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோதமான கடற்றொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (13.05.2023) இடம்பெற்ற சிலாபம் பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சருக்கு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில்முறை காரணமாக சிலாபம் புத்தளம் பிரதேச கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி வடக்கு மாகாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.
விசேட கவனம்
விரைவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமையில், குறித்த விஜயத்தின் போது கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த சந்திப்பில் சிலாபம் மீன் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள சந்தை கட்டிடத்தில்
வியாபார நடவடிக்கையை முன்னெடுத்தல், சிலாபம் துறைமுகத்தில்
பொருத்தப்பட்டிருந்த வானொலி தொடர்பாடல் கருவியை பழுதுபார்த்து செயற்படுத்தல்,
எக்ஸ்பிரஸ் பேர்ள் நட்ட ஈட்டினை சிலாபம் கடற்றொழிலாளர்களுக்கும் கிடைக்கச்
செய்தல் மற்றும் எரிபொருளை குறைந்த விலையில் பெற்றுக் கொடுத்து கடற்றொழிலாளர்களுக்கான
எரிபொருள் செலவை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டுள்ளது.



