மட்டக்களப்பில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த குழு கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுவந்த குழுவொன்றை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து பல இலட்சம் பெறுமதியான போதைப் பொருள்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினரால் இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லடி பகுதியிலுள்ள வீடு ஒன்று இன்று காலை முற்றுகையிடப்பட்டதுடன், அங்கிருந்து 300 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 15 கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் என்பன மீட்கப்பட்டதுடன், அங்கிருந்து 250,000 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 38 இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கல்முனையிலும் போதைப்பொருள் விற்பனை நிலையம் கல்முனை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன், அங்கிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த முற்றுகையின்போது பெண் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் கொழும்பில் உள்ள பிரதான போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஏற்பட்ட தொடர்புகள் மூலம் போதைப்பொருள் வியாபாரத்தினை முன்னெடுத்து வந்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இது தொடர்பான விசாரணைகளையும் காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.