வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 89 இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச சிவப்பு அறிவித்தல்
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றங்களுக்காக சிவப்பு அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர்.
பல்வேறு குற்றங்களுக்காக தடுத்துவைப்பு
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தலைமறைவாக இருந்த 8 குற்றவாளிகள் நேற்று (27) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 22ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 19 சந்தேகநபர்கள் மற்றும் இரண்டு பெண் சந்தேகநபர்கள் உட்பட 21 பேர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு, அதாவது 27ஆம் திகதி மேலும் 8 சந்தேகநபர்களை ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இந்த 8 சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் மற்றும் ஷார்ஜா பகுதிகளில் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களாவர்.
திட்டமிட்ட குற்றகும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு
இந்த சந்தேகநபர்களில் மூவர், திட்டமிட்ட குற்ற கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, அங்கிருந்தவாறே இலங்கையில் சில குற்றச் செயல்களை இயக்கிய குழுவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2024, 2025 மற்றும் 2026 ஆகிய இந்த மூன்று வருடங்களிலும் சிவப்பு எச்சரிக்கை மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட 32 சந்தேகநபர்கள், அதேபோன்று பல்வேறு நாடுகளுடன் தொடர்புகொண்டு தற்போது பல்வேறு குற்றங்களைச் செய்து வரும் மேலும் 70 சந்தேகநபர்கள் இதுவரையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும் 89 சிவப்பு எச்சரிக்கைகள் தொடர்பில் பல்வேறு நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, எஞ்சியுள்ள சிவப்பு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள 89 சந்தேகநபர்களையும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.