71084 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது: ரூபவதி கேதீஸ்வரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் 71084 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாண்டு நெற்செய்கை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிராமிய பொருளாதார புத்தெழுச்சி மற்றும் உணவுப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் உணவு உற்பத்தி தொடர்பில் நேற்று (24.10.2022) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வாண்டு காலப்போகத்தின் போது 71084 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பயிர் செய்கை நிலங்கள்
இதேவேளை 370 ஏக்கர் நிலப்பரப்பில் சோள பயிர் செய்கையும், 20 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயமும், 330 ஏக்கர் நிலப்பரப்பில் சிறிய வெங்காயமும், 52 ஏக்கர் நிலப்பரப்பில் குரக்கன் செய்கையும் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1190 ஏக்கர் நிலப்பரப்பில் மிளகாய் செய்கையும், 690 ஏக்கர் நிலப்பரப்பில் கௌப்பியும் 620 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலையும், 890 ஏக்கர் நிலப்பரப்பில் உழுந்துச் செய்கையும், 680 ஏக்கர் நிலப்பரப்பில் பயறுச் செய்கையும், 180 ஏக்கர் நிலப்பரப்பில் எள்ளும் பயிரிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உரம் விநியோகம்
விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்காக எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் அதேநேரம் நெற்செய்கைக்கு தேவையான உரம் விநியோகிக்கும்
நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.



