சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது
மட்டக்களப்பு- மண்முனை மேற்கு பிரதேசத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேரை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காஞ்சிரங்குடா காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வடிசாராயம் (கசிப்பு) உற்பத்தி செய்யத் தயார் நிலையிலிருந்த ஏழு பரல்களில் 1200 லீட்டர் கோடாவையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும், இந்த வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் காட்டுக்குள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு தகவலுக்கமைவாக சின்னக்காலபோட்டமடு பகுதியில் இரண்டு உழவு இயந்திரப் பெட்டிகளில் அனுமதிப் பத்திரம் இல்லாது மண் ஏற்றும் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கனரக கென்டர் வாகனங்களில் அனுமதிப்பத்திரம் இருந்தும் அதன் நிபந்தனைகளை மீறி பாவற்கொடிச்சேனை பகுதியிலுள்ள வீதியால் மண் ஏற்றிவருகையில் மூன்று வாகனங்களும் அதிலிருந்த ஐந்து நபர்களையும் தாம் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமியின் வழிகாட்டலுக்கமைய பொலிஸ் உதவி பொலிஸ் பரிசோதகர்களான குணவர்த்தன, விக்கிரமசிங்கே, பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களான டினேஸ், ஜயவீர உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரையும், குறித்த வாகனங்களையும் இன்று 28ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த கப்புகாமி தெரிவித்துள்ளார்.