காணாமல் போன 5 கடற்றொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்பு! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
காலி- ரத்கம கடற்பரப்பில் காணாமல் போயிருந்த ஐந்து கடற்றொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர், ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
நவம்பர் 26 ஆம் திகதி ரத்கம வெல்ல மீன்பிடி இறங்குதுறையிலிருந்து கடலுக்குச் சென்ற ஏழு படகுகளில், இரண்டு படகுகள் கரை திரும்பாததையடுத்து இந்த மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கை கடற்படையினர் 'டோரா' ரக படகொன்றையும், இலங்கை விமானப்படையினர் உலங்கு வானூர்தி ஒன்றையும் தேடுதல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியிருந்தனர்.
தேடுதல் நடவடிக்கை
இந்தத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், நேற்று (27) இரவு, ஒரு படகில் இருந்த மூன்று கடற்றொழிலாளர்கள், அக்கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பல நாள் மீன்பிடிக் கலன் ஒன்றினால் மீட்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை, இரண்டாவது படகில் இருந்த மற்றைய இரண்டு கடற்றொழிலாளர்களும் பிறிதொரு பல நாள் மீன்பிடிக் கலனால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த வெற்றிகரமான மீட்புப் பணி குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த ஐந்து கடற்றொழிலாளர்களின் உயிர்களையும் காப்பாற்ற முடிந்தமை குறித்து நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.அவர்களின் பாதுகாப்பே எமது முதன்மையான பொறுப்பாகும்.
விசேட வேண்டுகோள்
இந்த மீட்புப் பணிக்கு உதவிய இலங்கை கடற்படை, விமானப்படை, விசேடமாக, தமது உயிரைப் பணயம் வைத்து, கடற்றொழிலாளர்களை காப்பாற்றிய பல நாள் படகுகளின் ஊழியர்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

மேலும், இந்த மோசமான காலநிலை சீரடையும் வரை, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திடமிருந்தோ அல்லது வளிமண்டலவியல் திணைக்களத்திடமிருந்தோ உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அவர் முழு கடற்றொழில் சமூகத்திற்கும் விசேட வேண்டுகோளையும் விடுத்தார்.