மட்டக்களப்பில் வாக்கினை பதிவு செய்த சாணக்கியன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியன் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் அவர் தனது வாக்கினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது செல்வாக்கினை தமிழரசுக்கட்சி காட்டியது. இந்த தேர்தலில் வடகிழக்கில் இலங்கை தமிழரசுக்கட்சி அமோக ஆதரவுடன் வெற்றிபெறும் என இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் இன்று காலை முதல் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலையில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
இதேபோன்று பல்வேறு கட்சிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தமது வாக்குகளை பதிவுசெய்ததை காணமுடிந்தது.
முதலாம் இணைப்பு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது.
இன்று காலை 7 மணி முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள 447 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிக்கும் பணிகள் சுமூகமான முறையில் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு வாக்களிப்பு நிலையங்களிலும் வேட்பாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று காலை வாக்களிக்கும் கடமையில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
வாக்களிப்பு நடவடிக்கை
செங்கலடியில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் ஊடகவியலாளர் எஸ்.நிலாந்தன் வாக்களித்ததுடன் மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் இ.சிறிநாத் ஆகியோர் தமது வாக்குகளை பதிவுசெய்தனர்.
இதேபோன்று ஆரையம்பதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தனது வாக்கினை பதிவுசெய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 நகரசபை, 1 மாநகரசபை, 9 பிரதேச சபை உட்பட 12 உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள 144 வட்டாரங்களில் இருந்து 146 பேர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் போனஸ் ஆசனம் உட்பட மொத்தமாக 274 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இத் தேர்தலில் 11 அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்கள் உட்பட 101 கட்சிகள் குழுக்கள் களமிறங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 447 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றுவருகின்றது.









